search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவகாசி டாஸ்மாக் கடை"

    கள்ளக்காதலை கண்டித்ததால் கோழிக்கறியில் வி‌ஷம் கலந்து சகோதரர்களை கொன்றதாக கைதான பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி முத்தாட்சி மடத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மகன் அய்யப்பன் (வயது22).

    இவர் தனது நண்பர்கள் காமராஜர் காலனி கணேசன், வேலாயுத ரஸ்தாவை சேர்ந்த செய்யது இப்ராகிம் ஷா என்ற ஜம்பு (22), லிங்காபுரம் காலனி கவுதம் (15) மற்றும் சிலருடன் அங்குள்ள சிறுகுளம் கண்மாய் கரையில் மது அருந்தி உள்ளார்.

    பட்டாசு ஆலை தொழிலாளர்களான இவர்கள் விடுமுறை நாளில் ஒன்றாக கூடி மது அருந்துவது வழக்கம். நேற்று மது அருந்திய சிறிது நேரத்தில் கணேசன் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்குள் மேலும் 3 பேரும் உடல்நலம் பாதிக்கப்பட்டனர்.

    அவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி கணேசன், செய்யது இப்ராகிம் ஷா என்ற ஜம்பு, கவுதம் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

    அவர்களுடன் மது அருந்திய அய்யப்பன், ஜனார்த்தனன் (14), சரவணக்குமார் (23), அரிகரன் என்ற அந்தோணி (22) ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர்களில் அந்தோணி தவிர மற்ற 3 பேரும் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையில் அய்யப்பனின் அண்ணன் முருகன் (27) அவரது வீட்டில் மயங்கி விழுந்து இறந்தார்.

    ஒரே நேரத்தில் 4 பேர் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் சிவகாசியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மது குடித்ததால் அவர்கள் இறந்ததாக தகவல் வெளியான நிலையில் சிவகாசி லிங்காபுரம் காலனியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை (எண்.11851) பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

    காலாவதியான மது விற்கப்பட்டதா? அல்லது மதுவில் வி‌ஷம் கலந்து கொடுக்கப்பட்டதா? என்ற சந்தேகம் எழுந்தது.

    இதுகுறித்த தகவல் கிடைத்ததும் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன், மதுரை சரக டி.ஐ.ஜி. பிரதீப்குமார், விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் சம்பவ இடம் விரைந்து விசாரணை நடத்தினர்.

    முதலில் இறந்த கணேசன் எடுத்த வாந்தியை பரிசோதனை செய்தபோது அதில் குருணை மருந்து கலந்து இருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மது அருந்திய 3 பேர் இறந்த நிலையில் வீட்டில் இருந்த முருகன் இறந்தது எப்படி? என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் முருகனின் சகோதரி வள்ளி (33) சமைத்த கோழிக்கறியில் (சிக்கன் 65) குருணை மருந்து கலந்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அதை சாப்பிட்டதுதான் 4 பேரின் சாவுக்கு காரணம் என தெரியவந்தது.

    உடனடியாக போலீசார் வள்ளியை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

    இதில் அவர் சகோதரர்களை கொலை செய்ய திட்டமிட்டு கோழிக்கறியில் வி‌ஷம் கலந்து இருப்பது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார் வள்ளியை கைது செய்தனர். அவர் போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

    சிவகாசியில் செல்வம் (44) என்பவர் நடத்தி வந்த அச்சகத்தில் பணியாற்றி வந்தேன். கணவரை பிரிந்து வாழ்ந்த எனக்கும், செல்வத்துக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது கள்ளக்காதலாக மாறியது.

    இதுகுறித்து தெரிய வந்ததும் எனது தம்பிகள் முருகன், அய்யப்பன் கண்டித்தனர். இதுபற்றி செல்வத்திடம் தெரிவித்தேன். அவர் கூறியபடி முருகனுக்கு பிடித்த கோழிக்கறியில் குருணை மருந்தை கலந்தேன். பின்னர் நான் இருக்கன்குடி கோவிலுக்கு செல்வதாக முருகனிடம் கூறி விட்டு வெளியில் சென்று விட்டேன்.

    முருகன் தான் சாப்பிட்டதுபோக மீதமுள்ள கோழிக்கறியை நண்பர்களுக்கு கொடுத்துள்ளான். இதனை சாப்பிட்டதால்தான் மருந்து அருந்தியவர்கள் மயங்கி விழுந்துள்ளனர். இதில் கணேசன், செய்யது இப்ராகிம் ஷா என்ற ஜம்பு, கவுதம் இறந்துள்ளனர். முருகன் வீட்டிலேயே மயங்கி விழுந்து இறந்துள்ளான்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    வள்ளி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சிவகாசி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் வழக்குப்பதிவு செய்து அச்சக அதிபர் செல்வத்தையும் கைது செய்தார்.

    இதற்கிடையில் சிவகாசி பராசக்தி காலனியை சேர்ந்த ராஜாமுகமது (60), கருப்பையா (62), ரிசர்வ் லைன் சிவக்குமார் (28), விசுவநத்தம் கருப்பசாமி (33) ஆகியோர் மது குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தனர். இவர்களில் கருப்பசாமி மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

    பராசக்தி கலனியில் உள்ள டாஸ்மாக் கடையில் (எண்.11848) மது வாங்கி அருந்திய இவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது ஏன்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சிவகாசியில் டாஸ்மாக் கடைகளில் மது வாங்கி குடித்த நண்பர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    விருதுநகர்:

    சிவகாசி லிங்காபுரம் காலனியில் டாஸ்மாக் மதுக்கடை(எண்-11851) உள்ளது. இங்கு நேற்று மதியம் அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் சிலர் மது பாட்டில்களை வாங்கியுள்ளனர். அவர்கள் மதுபாட்டில்களுடன் சிறுகுளம் கண்மாய் கரை பகுதிக்கு சென்று ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர். மது குடித்த சில நிமிடங்களிலேயே காமராஜர் காலனியை சேர்ந்த முனியப்பன் என்பவரது மகன் கணேசன்(வயது21) வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார்.

    இதைப்பார்த்ததும் மற்றவர்கள் பயந்து போய் கணேசனின் தம்பி சக்திவேலுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர் ஆட்டோவில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அவர் அங்கு வந்து சேருவதற்குள் மதுகுடித்த மேலும் 3 பேருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தனர். அனைவரையும் சக்திவேல் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அனைவரையும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல டாக்டர்கள்அறிவுறுத்தினர்.

    உடனே அனைவரும் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு கணேசன், வேலாயுத ரஸ்தாவை சேர்ந்த ஷேக் ஜமாலுதீன் என்பவரது மகன் சையது இப்ராகிம்ஷா என்கிற ஜம்பு(22), லிங்காபுரம் காலனி அய்யாத்துரை என்பவரது மகன் கவுதம்(15) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.

    இதுகுறித்து சக்திவேல் மற்றவர்களுக்கு தகவல் கொடுத்த நிலையில் கணேசனுடன் சேர்ந்து மது குடித்த முத்தாட்சிமடத்தை சேர்ந்த தர்மராஜ் என்பவரது மகன் அய்யப்பன்(22), காமராஜபுரம் காலனியை சேர்ந்த சிவகுமார் என்பவரது மகன் ஜனார்த்தனன்(14), லிங்காபுரம் காலனியை சேர்ந்த முருகன் மகன் சரவணகுமார்(23), சிவஞானபுரம் காலனியைச் சேர்ந்த முருகன் மகன் அரிகரன் என்கிற அந்தோணி(22) ஆகியோரும் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். இவர்களை உறவினர்கள் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

    உடல்நலம் பாதிக்கப்பட்டோரில் அந்தோணி மட்டும் சிவகாசி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மற்ற மூவரும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    3 பேர் உயிரிழந்த நிலையில் அந்தப்பகுதி முழுவதுமே பரபரப்பும் பதற்றமும் உருவானது. எத்தனை பேர் மது குடிக்க சென்றனர், எத்தனைபேர் பாதிக்கப்பட்டனர் என தெரியாத நிலையில் சிகிச்சை பெற்று வரும் அய்யப்பனின் அண்ணன் முருகன்(27) தனது வீட்டில் சுருண்டு விழுந்து இறந்து கிடந்தார். இதனால் அவரும் நண்பர்களுடன் சென்று மது அருந்தியிருப்பது தெரிய வந்தது. இதனால் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

    இந்த நிலையில் சிவகாசி பராசக்தி காலனியை சேர்ந்த ராஜாமுகமது(60), கருப்பையா(62), ரிசர்வ்லைன் பகுதியை சேர்ந்த சண்முகராஜ் மகன் சிவகுமார்(28), விசுவநத்தம் கணேசன் காம்பவுண்டு பகுதியை சேர்ந்த ராசையா மகன் கருப்பசாமி(33) ஆகியோரும் மது குடித்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். இவர்களில் கருப்பசாமியை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்ற மூவருக்கும் சிவகாசியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இவர்கள் 4 பேரும் சிவகாசி பராசக்தி காலனியில் உள்ள டாஸ்மாக் கடையில்(எண்-11848) மது வாங்கி குடித்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது. சிவகாசியில் 2 கடைகளில் மது வாங்கி குடித்திருப்போர் பாதிக்கப்பட்டிருப்பதால் காலாவதியான மது அங்கு விற்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழும்பியுள்ளது. அந்த இரு கடைகளும் உடனடியாக மூடப்பட்டன.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் தென் மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன், மதுரை சரக டி.ஐ.ஜி. பிரதீப்குமார், போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் ஆகியோர் சிவகாசிக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்று தீவிர விசாரணை நடந்து வருகிறது.  #tamilnews
    ×